Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
தூத்துக்குடி: மும்பையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தூத்துக்குடியில் தொழிலதிபராக வலம் வந்த ஏரல் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான குமரி, உளுந்தூர் பேட்டை வாலிபர்களும் போலீசில் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். விவசாயி. இவரது மூத்த மகன் சரவணன் (36) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விட்டார். உறவினர் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சரவணன் திடீரென ஊருக்கு காரில் வந்து இறங்கினார். கோட், சூட் அணிந்து பெரும் பணக்கார தோற்றத்தில் வந்த அவரை பார்த்ததும் தந்தை மற்றும் சகோதர, சகோதரிகள் மகிழ்ந்தனர். 

சரவணன், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரிடம் ‘நான் மும்பையில் டிரைவிங் பழகி, சைன்கோலிவாடா பகுதியில் சமாஜ்வாடி கட்சி பிரமுகரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன்‘ என்று கூறினார். அதன்பிறகு ஒரு மாதம் வீட்டிலிருந்த சரவணன் மீண்டும் மும்பை சென்றார். அதன்பிறகு அவர் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் ஊருக்கு வருவதும் மீண்டும் மும்பை செல்வதுமாக இருந்து வந்தார். சரவணன் திரும்பி வந்ததில் இருந்து அவரது வீட்டில் வசதி, வாய்ப்புகள் பெருகின. சொந்தமாக அகரத்தில் பங்களா போன்று பெரிய வீடு கட்டினார். தம்பி, தங்கைகள் திருமணத்தையும் விமரிசையாக நடத்தினார். சரவணனுக்கு தற்போது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மும்பை பார்லே பகுதியைச் சேர்ந்த தனிப்படை போலீசார் தூத்துக்குடி வந்தனர். எஸ்.பி. துரையைச் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள், ஏரல் போலீஸ் உதவியுடன் நேற்று அகரம் சென்று சரவணனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் தெரிவித்ததாவது: மும்பையில் வேலை பார்த்து வந்த சரவணன், தனது கூட்டாளியான கன்னியாகுமரி, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வீடு மற்றும் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மும்பையில் கொள்ளையடிக்கும் இவர்கள், அதன்பிறகு சொந்த ஊருக்கு வந்து விடுவர். இதனால் அவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துள்ளனர்.  இவர்கள்  இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளதாக தெரிகிறது. கடந்த வாரம் பார்லே பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் நேற்று சரவணனை கைது செய்தனர். இதேபோல் அவரது கூட்டாளியான குமரி வாலிபரையும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை வாலிபரையும் கைது செய்த போலீசார், அவர்களை மும்பைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment